Feb 22, 2011

தீவிரவாதம் இஸ்லாத்திற்கு எதிரானது - இமாம்கள் சபை!

{mosimage}புதுதில்லி: "தீவிரவாதம் தொடர்பான எந்த ஒரு செயல்பாடும் இஸ்லாத்திற்கு எதிரானது" என இஸ்லாமிய மதரஸாக்களின் கூட்டமைப்பு உறுதிபடுத்தியுள்ளது. இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய அறிஞர்கள் வந்து கலந்துக் கொண்ட உத்தரபிரதேசம் மாநிலம் தேவ்பந்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்றியுள்ளனர்.
"கலவரம், குழப்பம் உருவாக்குவதும் கொலை செய்வதும் இஸ்லாத்தில் மிகவும் வெறுக்கப்பட்டக் குற்றமாகும். மதப்பண்டிதர்கள் இஸ்லாமிய விரோத, தேச விரோதச் செயல்பாடுகளில் கவரப்படமாட்டார்கள். இஸ்லாம் அன்பையும் சமாதானத்தையும் போதிக்கும் மார்க்கமாகும்." என்று 150 வருடப் பாரம்பரியமுள்ள தேவ்பந்த் தாருல் உலூம் மத்ரஸா கல்வி நிலையத்தின் முக்கிய ஆசிரியரான மௌலானா மர்ஹூபுர் ரஹ்மான் கூறினார்.

"திருமறை குர்ஆன், எல்லா சக உயிரினங்களுடனும் இணக்கத்துடன் வாழவே கட்டளையிடுகின்றது. மதரஸாக்களுக்குத் தீவிரவாதத்துடன் எவ்விதத் தொடர்பும் கிடையாது. மதரஸாக்கள் நடைமுறை இஸ்லாமிய வாழ்க்கைப் பாடங்களைப் போதிக்கும் புனிதப் பள்ளிகளாகும். இவையல்லாது, இஸ்லாத்தின் மீதும் மதரஸாக்கள் மீதும் பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவைகளாகும்" என மேலும் அவர் கூறினார்.

"தீவிரவாதம் தொடர்புள்ள வழக்குகளைக் கையாளும் பொழுது அரசுகள் பல நேரங்களிலும் பாரபட்சத்துடன் செயல்படுகின்றன. ஆதிக்க சக்திகளின் துணையுடன் மதரஸாக்களைத் தீவிரவாதப் பரிசீலனைக் கூடங்களாகச் சமூகத்தின் முன்னிலையில் சித்தரிப்பதற்கான முயற்சிகள் முழு அறிவுடன் நடைபெறுகின்றன. ஆனால், இந்நாட்டில் செயலபடும் மதரஸாக்கள் அனைத்தும் மனிதத்தன்மை, சமாதானம், அன்பு போன்றவற்றினை ஒவ்வொருவருக்கும் அறிவித்துக் கொடுக்கும் கூடங்களாகவே செயல்படுகின்றன" என மௌலானா அறிவித்தார்.